Pages

Wednesday, November 27, 2013

2ம் இடம் ஆரம்ப கல்வி என்றால்

2ம் இடம் ஆரம்ப கல்வி என்றால் 4ம் இடம் உயர்கல்வி ஆகும்.  ஒருவர் வக்கீலுக்குப் படிப்பாரா? இன்ஜினியருக்குப் படிப்பாரா? டாக்டருக்குப் படிப்பாரா? ஆடிட்டருக்கு படிப்பாரா அல்லது I.A.S மற்றும்   I.P.S போன்ற படிப்புகளைப் படிப்பாரா என்பதை நான்காம் இடத்தை வைத்துக் கொணடு சுலபமாக சொல்லி விடலாம். எனவே இந்த பாவத்தை சிறப்பாக அறிய வேண்டும்.  பல சந்தேகங்களை அலசிப் பார்க்க வேண்டும்.  இதில் தேர்ச்சியடைந்து விட்டால் எந்த ஜாதகத்தைப் பார்த்தாலும் அவர் என்ன படிப்பு படிக்க முடியும் என்று சொல்லி விட முடியும்.
நான்காம் வீட்டு அதிபர் பலம் பெற்றால் உயர் கல்வியை சிறப்பாகப் பூர்த்தி செய்வார்.  4ம் வீட்டு அதிபர் ஆட்சி பெற்றோ அல்லது உச்சம் பெற்றோ இருந்தால் அவருக்கு படிப்பு நன்றாக வரும்.  அதே போல கல்விக்குரிய கிரகம் புதனாகும்.  எனவே புதனும் பலம் பெற வேண்டும்.  புதன் ஆட்சி உச்சம் அல்லது நட்பு வீட்டில் இருந்தால் படிப்பு நன்றாக வரும்.  படிப்பு நன்றாக வருவதற்கு சந்திரனின் துணையும், குருவின் துணையும் அவசியம்.  சந்திரனை மனோகரன் என்று சொல்வார்கள்.  மனதிற்கு அதிபதி சந்திரன் பலம் பெற்றால் படிப்பதற்கு மனம் செல்லும் இல்லையென்றால் கவனம் வேறு எங்கெல்லாம் செல்லும், குருவை அறிவுக்கதிபதி என்று சொல்வார்.   ஒன்று சொன்னால் உடனே பிடித்து கொள்வார்கள் எனவே புதன், சந்திரன் குரு ஆகியவை நன்றாக இருந்து, நான்காம் வீட்டு அதிபரும் நன்றாக இருந்தால் படிப்பு நன்றாக வரும்.  தங்கபதக்கம் பெறும் அளவிற்கு உயர்ந்த மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
நான்காம் வீட்டு அதிபருடன் புதன் இணைந்து, அவர்களை குரு பார்த்தால் பட்டப்படிப்பை பூர்த்தி செய்வார்கள்.
இரண்டாம் வீட்டிற்குரிய கிரகமும், நான்காம் வீட்டிற்குரிய கிரகமும் இணைந்து 1,2,4,5,9,11 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் நின்றாலும், பட்டபடிப்பு அமையும்.  இவ்வாறு அமைந்தகிரகங்களை குரு பார்த்தால் நிறைய மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
ஐந்தாம் வீடு புத்திஸ்தானம் என்று சொல்லப்படும். எனவே இந்த வீட்டிற்கதிபர் ஆட்சி பெற்று குருவின் பார்வையைப் பெற்றால் கண்டிப்பாக கல்லியைப் பூர்த்தி செய்வார்கள்.
கல்லி தடை ஏன்?
ஒரு சிலருக்கு கல்வியில் தடை ஏற்படுகிறது ஏனென்றால் சூரியன் புதனுடன் சுக்கிரன் இணைந்து நின்றால் படிப்பில் தடை ஏற்படுகிறது.  சூரியன் புதனுடன் ராகு இணைந்து நின்றாலும் படிப்பில் தடை எற்படுகிறது.  குரு பார்த்தால் தடை விலகும் பரிகாரம் செய்து கொண்டாலும் தடை விலகும்.
பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடத்தில் தீய கிரகங்கள் இருந்தாலும் படிப்பில் தடை ஏற்படும்.
ஐந்தாம் வீட்டையோ அல்லது அந்த அதிபரையோ தீய கிரகங்கள் பார்த்தாலும் தடை ஏற்படும்.
ஐந்தாம் வீட்டு அதிபர் நீசம் பெற்றால் படிப்பில் தடை.  அதேபோல ஐந்தாம் வீட்டில் நீச கிரகம் இருந்தாலும் படிப்பில் தடை.
புதன் நீசம் பெற்று சனியுடன் சேர்ந்திருந்தாலும் அல்லது தீய கிரகத்தால் பார்க்கபட்டாலும் தடை.
ஐந்தாமிடத்து அதிபருடன் தீய கிரகங்கள் சேர்ந்தாலும் படிப்பில் தடை ஏற்படும்.
இது போன்ற பல அமைப்புகளில் ஏதேனும் ஒரு சில அமைப்பு இருந்தால் கூட கல்வியில் தடை ஏற்படும்.
கல்வி பயில எந்த கிரகங்களின் துணை அவசியம்:
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித படிப்பை படிக்கின்றனர்.  எனவே யார் யார் எந்தெந்த கல்வியைப் படிப்பார்கள் என்று நாம் தெரிந்து கொள்ள விரும்பினால், கிரகங்களைப் பற்றி நாம் நன்றாக அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.  ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு வித படிப்பை நமக்குத் தரும்.  நவகிரகங்களுக்கு எந்தெந்த படிப்பை நமக்குக் கொடுக்க தூண்டுகோலாக இருக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரே ஒரு கிரகத்தை மட்டும் வைத்து படிப்பை முடிவு செய்து கொள்வதை விட அந்த கிரகத்தோடு இணையும் மற்ற கிரகத்தை வைத்தும் கல்வியை முடிவு செய்ய வேண்டும்.  முதலில் கிரகங்களின் இயற்கைத் தன்மைகளை அறிந்து கொள்வோம்.
சூரியன்:
 ஒருவரது ஜாதகத்தில் சூரியன் பலமாக இருந்தால் அறிவாளியாக அவர் இருப்பார்.  நிர்வாக ஆற்றல் இருக்கும் நீதிபதியாக ஆக்கவும் சூரியனுக்கு முடியும்.  அதே போல அறிவில் நிபுணராகவும் மாற்றும், மெய்ஞானியாகவும் மாற்றும் மருத்துவராக வாழவும் சூரியன் உதவுகிறது.  காவல் துறையில் உயர் பதவி வகிக்கவும் சூரியனுக்கு ஆற்றல் உண்டு.  ஆக ஒரே கிரகம் பல படிப்புகளைப் படிப்பதற்கு தூண்டுகோலாக அமைகிறது.
சூரியன் மேஷ ராசியில் உச்சம் பெற்று இருப்பதால் உயர்ந்த நிலையை அடையும் அளவிற்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.  சுக்கிரன் வீடான ரிஷபத்தில் சூரியன் இருந்தால் இசைக்கல்வி கற்க முடியும்.  மிதுனத்தில் (புதன் வீட்டில்) சூரியன் நின்றால் பட்டம் வாங்க முடியும்.  சிம்மத்தில் ஆட்சி பெற்றிருந்தால் நிர்வாகத் துறையில் அறிவு ஏற்படும்.  கன்னியில் இருந்தால் கணக்கில் நிறைய மதிப்பெண்கள் பெறுவார்கள்.  கவிதை, கட்டுரை எழுதுவார்கள்.  விருச்சகத்தில் சூரியன் இருந்தால் சிறந்த கல்வி மான் என பெயரெடுப்பார்கள்.  தனுசு ராசியில் இருந்தால் அறிவியற் துறையில் புலமை ஏற்படும்.  மகரத்தில் சூரியன் இருந்தால்(சனி விடு) படிப்பு அவ்வளவாக வராது.  மீனத்திலிருந்தால் நீர் சம்மந்தப்பட்ட துறையில் அறிவு வளரும்.  இவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் சூரியன் இருக்கும் பொழுது, அந்த வீட்டின் தன்மை, அந்த வீட்டு அதிபரின் தன்மை ஆக இது போன்ற பாவத்தை ஆய்வு செய்த பிறகே பலனை முடிவு செய்ய வேண்டும்.
சந்திரன்:
சந்திரன் பலம் பெற்றிருந்தால் கற்பனை வளம் பெருகும்.  பெரிய வியாபாரியாக முடியும்.  அடிப்படை கல்வியில் பட்டம் பெற முடியும்.  நீர்வளம்.  கங்க இலாகா, மீன்வளம் இவற்றில் திறமை ஏற்படும்.  பெரிய உணவு விடுதிகளை நிர்வகிக்கும் படிப்பை படிக்கத் தூண்டும்.
சந்திரன் மிதுன ராசியில் இருந்தால் புலமை ஏற்படும்.  கடகத்தில் இருந்தால் ஜோதிட அறிவு ஏற்படும்.  கன்னியில் சந்திரன் இருந்தால் நல்ல பேச்சாளாராக முடியும்.  விருச்சகத்தில் இருந்தால் அறிவாளியாக முடியும். தனுசு ராசியில் இருந்தால் பேச்சுத் திறமை ஏற்படும்.  மகரத்தில் சந்திரன் இருந்தால் புலவராக வர முடியும்.  பாடகராகவும் வரமுடியும், மீனத்தில் இருந்தால் நன்றாக படிப்பு வரும்.
செவ்வாய்:
       செவ்வாய் பலமாக இருந்தால் வழக்கறிஞர் ஆக முடியும்.  என்ஜினியராகவும் முடியும்.  மருத்துவராகவும் முடியும்.  விவசாய கல்வியைப் பெற முடியும்.
செவ்வாய் மேஷத்தில் ஆட்சி பெற்று நின்றால் இராணுவக் கல்வி பயில முடியும்.  சுக்கிரனின் வீடான ரிஷபத்தில் செவ்வாய் நின்றால் சங்கீதம் கற்க முடியும்.  புதன் வீடான மிதுனத்தில் நின்றால் கவிதை புனைய முடியும்.  கடகத்தில் செவ்வாய் நின்றால் விவசாயக் கல்வி வரும்.  கன்னியில் நின்றால் படிப்பு வரும்.  விருச்சகத்தில் ஆட்சி பெற்று நின்றால் தொழில் கல்வி வரும்.  தனுசு ராசியில் நின்றால் பெரிய நிறுவனங்களை நிர்வகிக்கும் அறிவு ஏற்படும். மகரத்தில் செவ்வாய் உச்சம் பெற்றால் அரசியல் வரும்.  பொருளாதாரை கல்வியில் நல்லத் தேர்ச்சி பெற முடியும்.  மீனத்தில் செவ்வாய் நின்றால் வெளிநாட்டில் படிக்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும்.
புதன்
ஒருவரது ஜாதகத்தில் புதன் பலம் பெற்று இருந்தால் கணக்கு நன்றாக வரும்.  அறிவியலில் தேர்ச்சி அடைவார்கள்.  சரித்திரத்தில் பரந்த அறிவைப் பெறுவார்கள்.  எழுத்துத் துறையில் பிரகாசிப்பார்கள்.  ஒருவர் நிறைய நூல்களை எழுதிக் குவிக்கின்றார்களென்றால் அவர்களுக்கு புதன் பலம் பெற்றிருக்க வேண்டும்.  ஒரு சிலர் மற்றவர்களுக்கு கல்வியைக் கற்று தரும் பேராசிரியர்களாக சிறப்பாக பணிபுரிகின்றார்களென்றால், புதன் அவர்களது ஜாதகத்தில் பலம் பெற்றிருக்கிறது என்று பொருள்.
பதிப்பகத் துறையில் சிறந்து விளங்க வேண்டுமென்றால் புதன் பலமாக இருக்க வேண்டும்.  ஜோதிடம் ஒருவர் படித்து சிறந்த ஜோதிடராக வர வேண்டுமென்றால் புதன் பலம்பெற வேண்டும்.  அவர்கள் துறையில் பணிபுரிய வேண்டுமென்றால் புதன் பலம் பெற வேண்டும்.
புதன் மேஷ ராசியில் இருந்தால் பாடல், நடனம் இவற்றில் நன்மை தரும்.  ஓவியம் மற்றும் பெயிடின்ங்கில் ஒருவர் கற்றுத் தேர்ச்சி பெற வேண்டுமென்றால் புதன் மேஷராசியில் நிற்க வேண்டும்.  ரிஷப ராசியில் நின்றால் அறிவு நன்றாக இருக்கும்.  மிதுனராசியில் இருந்தால் நுண்கலைகளில் திறமைவாய்ந்தவராக ஆக முடியும்.  பேராசிரியராக முடியும்.  கடகத்தில் புதன் நின்றால் நீர் நிலை பற்றிய கல்வியில் நிபுணத்துவம் ஏற்படும்.
குரு
ஒருவர் பெரிய வழக்கறிஞராகவும், நீதிபதிகளாகவும் ஆக விரும்பினால், அவரது ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருக்க வேண்டும்.  மருத்துவர்கள். தணிகை அதிகாரிகள் ஆகியோர் ஜாதகத்தில் குரு பலமாக இருப்பார்.  வருமானவரி இலாகா, வங்கி, கஜானா இவற்றில் பணிபுரியும் தகுதியுள்ள படிப்பு படிக்க குரு பலமாக இருக்க வேண்டும்.  பிரசாரகர் ஆக வேண்டுமென்றால் குரு பலம் பெற வேண்டும்.  புகையிலை மற்றும் ஆடைகள் உற்பத்தி செய்யும் கல்வியை அளிப்பவரும் குருவே.
குரு மேஷத்தில் இருந்தால் ராணுவப் பயிற்சிக்கான கல்வியைப் படிக்கலாம்.  ரிஷபத்தில் இருந்தால் வேதாந்தம், விவசாயம் சம்மந்தப்பட்ட நுண்ணறிவு இவர்களுக்கு வரும்.  அறிவாளியாக மற்றவர்கள் போற்றுவார்கள்.  மிதுனத்தில் குரு இருந்தால் கல்வி நன்றாக வரும்.  அதிபுத்திசாலிகளாக மற்றவர்கள் போற்றுவார்கள்.  சட்ட ஆலோசகராக வர முடியும்.  நல்ல நினைவாற்றல் ஏற்படும்.  கடகத்தில் குரு உச்சம் பெற்றால் கல்வியில் உச்ச நிலையை அடைய முடியும்.  சிம்மத்தில் குரு இருந்தால் ஆன்மீக கல்வியைப் படிக்க விரும்புவார்கள்.  நிர்வாகத்திறமையை சார்ந்த படிப்பும் படிப்பார்கள்.  கன்னியில் குரு இருந்தால் கலை நுணுக்கத்திறன் உண்டாகும்.  துலாத்தில் குரு இருந்தால் வெளிநாட்டு கல்வி ஏற்படும்.  திரைப்படத்துறை சார்ந்த கல்வியும் கூடிய நல்ல நினைவாற்றல் உள்ள ஆசிரியராக வரமுடியும்.  விருச்சகத்தில் குரு இருந்தால் புத்தகங்களை எழுதும் ஆசிரியராக முடியும்.  தனுசில் குரு இருந்தால் அயல்நாட்டு கல்வி கற்க முடியும். பக்தி பிரசாரம் செய்ய முடியும்.  அதிபுத்திசாலியாக இருப்பார்கள்.  மகரத்தில் குரு இருந்தால் அறிவு மந்தமாக இருக்கும்.  கும்பத்தில் குரு இருந்தால் கல்வி ஓரளவே வரும்.
சுக்கிரன்
கல்வியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒன்பது கிரகங்களைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.  ஒவ்வொரு வீட்டிலும் அந்த கிரகங்கள் அமரும் பொழுது சில காரகத்துவங்கள் மாறும்.  ஓவியர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் ஆகியோர் உருவாகுவதற்கு சுக்கிரனே மூலகாரணமாவார்.  சுக்கிரனும் புதனும் இணைந்தால் ஏதோ ஒரு கலையில் வல்லவராக இருப்பார்கள்.  கட்ட்ட கலையில் நிபுணத்துவம் பெற வேண்டுமென்றாலோ, வாகன சம்மந்தப்பட்ட விஷயங்களில் நிபுணத்துவம் பெற வேண்டுமென்றாலோ, சுக்கிரன் பலம் பெற்றிருக்க வேண்டும்.
சுக்கிரன் ரிஷபத்தில் இருந்தால் படிப்பு வரும்.  விவசாயம் சம்மந்தப்பட்ட அறிவு வரும்.  மிதுனத்தில் சுக்கிரன் இருந்தால் இசையிலும், நடனத்திலும் ஆர்வம் உண்டாகும்.  கடகத்தில் சுக்கிரன் இருந்தால் அறிவாளியாக முடியும்.  கன்னியில் சுக்கிரன் இருந்தால் கலைநுணுக்கம் ஏற்படும்.  துலாத்தில் சுக்கிரன் இருந்தால் படிப்பு நன்றாக இருக்கும்.  தனுசில் சுக்கிரன் இருந்தால் நல்ல புத்திசாலிகளாக இருப்பார்கள்.  மீனத்தில் சுக்கிரன் இருந்தால் திறமையாகப் பேசுவார்கள்.  தொழில் பற்றிய கல்வியறிவு ஏற்படும். 
சனி
உழைப்பைக் கொடுக்கக் கூடிய கிரகம் சனி.  இவர் இரும்பு உலோகம்.  தச்சு வேலை சம்பந்தப்பட்ட படிப்பைக் கொடுப்பார்.  சனி ஒருவரது ஜாதகத்தில் உச்சமாக இருந்தால், தொழிற்சாலைகளை நிர்வாகம் பண்ணக் கூடிய கல்வி அறிவு ஏற்படும். அச்சுத்துறை எண்ணெய் சம்மந்தப்பட்ட துறை, நிலக்கரி சம்மந்தப்பட்ட வேலை, நிலம் வாங்கி விற்கும் கமிஷன் வேலை போன்ற துறைகளில் அறிவு ஏற்படும்.
சனி ஒருவரது ஜாதகத்தில் ரிஷபத்தில் இருந்தால் அதிகம் திறமை இருக்காது.  மிதுனத்தில் சனி இருந்தால் தொழிலில் ஞானம் ஏற்படும்.  கடகத்தில் சனி இருந்தால் அறிவாளி, கடுமையாக உழைப்பார்.  சிம்மத்தில் சனி இருந்தால் எழுதுவதில் திறமை ஏற்படும்.  கன்னியில் சனி இருந்தால் நிர்வாகத்தை தலைமை தாங்கும் தகுதி ஏற்படும்.  காவல் துறையில் வேலை பார்க்க முடியும் துலாத்தில் சனி உச்சம் பெற்றால் வெளிநாட்டுத் தொழில் துறை அறிவு ஏற்படும்.  தனுசுவில் சனி நின்றால் சாஸ்திர படிப்பு வரும்.  இராணுவக் கல்வியில் தேர்ச்சி பெற முடியும்.  மகரத்தில் சனி நின்றால் தொழிலில் நிபுணத்துவம் ஏற்படும்.  மீனத்தில் சனி நின்றால் நுண்ணிய அறிவு ஏற்படும்.
ராகு
ராகு ஒருவரை அறிவியல் துறையில் பிரகாசிக்க வைப்பார்.  ஆராய்ச்சி துறையிலும் ஈடுபடுத்துவார்.
கேது
இராணுவ சம்மந்தப்பட்ட படிப்பு, ஆன்மீகப் படிப்பு, தத்தவம் போன்றவற்றில் ஈடுபடுத்துவார்.
இவை அனைத்தும் பொது பலன்களே! ஒவ்வொரு ராசியிலும் அந்த கிரகங்கள் நிற்கும் பொழுது, அந்த கிரகத்தோடு வேறு கிரகம் சேர்ந்திருந்தாலும் பார்த்தாலும் பலன்கள் சற்று மாறுபடும்.  மேலும் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட ஜாதகத்தில் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ஆதிபத்யத்தைக் கொண்டவை எனவே அந்த கிரகங்கள் எந்த வீட்டிற்கு அதிபராக வருகிறதோ, அந்த வீட்டை ஒட்டியும் பலன்கள் மாறும்.  எனவே இவை எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே நாம் பலனை முடிவு செய்ய வேண்டும்.
ஒருவர் படிக்க வேண்டுமென்றால், அதற்கு அடிப்படையாகத் தேவையானவை பல வேண்டும்.  முதலில் அவர் படிக்க வேண்டுமென்றால் பொருளாதார வசதி வேண்டும்.  ஒரு சிலருக்கு நன்றாக படிப்பு வந்தாலும், பொருளாதார வசதி குறைவினால் படிக்க முடியாமல் போய் விடுகின்றனர்.  எனவே ஒருவர் படிப்பாரா என்ற நம்மை யாராவது கேட்டால், அவருக்கு படிப்பு வரும்.  எனவே படிப்பார் என்று பொதுப்படையாகச் சொல்லி விடக் கூடாது.  அதற்கேற்ப பொருளாதார வசதி இருந்தால்தான் அவர் படிப்பை பூர்த்தி செய்வார் என்று கூற வேண்டும்.  அடுத்து ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும்.  ஒரு சிலர் அடிக்கடி வியாதியால் அவதிப்பட்டு படிக்க முடியாமல் விட்டு விடுகின்றனர்.  எனவே ஆறாம் பாவத்தை (நோய்) சோதித்து, படிக்க உடல் ஆரோக்கியம் இடம் தருமா என்று முடிவு எடுக்க வேண்டும்.
ஒருவர் நன்றாக படிப்பதற்கு லக்னாதிபதியின் பலமும் அவசியம்.  லக்னாதிபதி தீய கிரகங்களான சனி செவ்வாய் சூரியன், ராகு, கேது ஆகிய கிரகங்களில் எவரேனும் ஒருவரோடு சேர்ந்து 6,8,12 ஆகிய இடங்களில் மறைந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கக் கூடும்.  இதிலும் விதிவிலக்கு இருக்கிறது.  அவ்வாறு மறையக்கூடிய வீடு.  அந்த கிரகத்தின் சொந்த வீடாக இருந்தா மறைந்து விட்டது என்று சொல்ல வேண்டியதில்லை.  கும்ப லக்னத்தின் அதிபர் சனி 12 ல் மகரத்தில் நின்றால் அந்த வீடு சனி சொந்த வீடாக இருப்பதால் மறைந்து விட்டது என்று சொல்லக்கூடாது.  இதுபோல் நாம் ஒவ்வொரு கிரகத்தையும் பார்க்க வேண்டும்.
ஒருவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் சூரியன் பலம் பெற்று நின்றால் அரசாங்க ஆதரவு நிச்சயம் உண்டு.
ஜென்ம லக்னத்தில் சந்திரன் பலம் பெற்று இருந்தால் சிந்தனையாளராக இருப்பார்கள்.  கற்பனை வளம் மிக்கவர்கள்.
ஜென்ம லக்னத்தில் செவ்வாய் பலமாக நின்றால் அறிவியல், பொறியியல், நியாயத்துறை போன்றவற்றில் படிப்பு நன்றாக வரும்.
ஜென்ம லக்னத்தில் புதன் பலமாக நின்றால் எல்லா துறைகளிலும் அறிவில் சிறந்து விளங்க முடியும்.  இவர்களை master of all subject என்று கூறுவார்கள்.
ஜென்ம லக்னத்தில் குரு பலம் பெற்று நின்றால் அற்புதமான சிந்தனை வளம் பெருகும்.  அறிவில் முதிர்ச்சியும் ஏற்படும்.
ஜென்ம லக்னத்தில் சுக்கிரன் பலம் பெற்று நின்றால் கலைத்துறையில் பிரகாசிக்க முடியும்.  கலைகளில் சிறந்து விளங்குவார்கள்.
ஜென்ம லக்னத்தில் சனி பலம் பெற்று நின்றால் அரசாங்கத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.  சனி ஜீவனகாரகன்.
ஜென்ம லக்னத்தில் ராகு பலம் பெற்று நின்றால் மனோதத்துவப் படிப்பு வரும்.
ஜென்ம லக்னத்தில் கேது பலம் பெற்று நின்றால் அமானுஷ்யத் துறையில் ஆற்றலைப் பெறுவார்கள் ஞானியாக முடியும்.
எனவே லக்னத்தில் ஒன்பது கிரகங்களில் எந்த கிரகம் நிற்கின்றதோ, அந்த கிரகத்தின் ஆதிக்கம் அவர்களுக்கு ஏற்படும்.  எனவே நாம் லக்னத்தையும் கவனிக்க வேண்டும்.  ஆரம்ப கல்வியான இரண்டாம் வீட்டையும் கவனிக்க வேண்டும்.  உயர்கல்வியான நான்காம் வீட்டையும் கவனிக்க வேண்டும்.  கல்விக்குரிய புதனையும் கவனிக்க வேண்டும்.  ஆக இத்தனை அம்சங்களையும் கவனித்தோமென்றால் ஒருவர் எந்த துறையில் பிரகாசிக்க முடியும் என்பதைச் சொல்லி விட முடியும்.

யார் என்ன படிப்பு படிப்பார்கள்?

       அந்தந்த துறையில் படிக்க வேண்டுமென்றால் என்ன விதமான கிரக அமைப்பு இருக்க வேண்டுமென்று பார்ப்போம்.  இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பும் படிப்பு பொறியியல், மருத்துவம் அடுத்து பட்டப்படிப்புகள்.  எனவே ஒருவர் இன்ஜினியர் படிப்பு படிப்பாரா?
இன்ஜினியரிங் படிப்பு படிப்பாரா?
இன்ஜினியரிங் படிப்பை தமிழில் பொறியியல் என்று சொல்வார்கள்.  பிளஸ்2 படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோரது குறிக்கோள், தான் படித்து என்ஜினியர் ஆக வேண்டும் என்பதே! மேலை நாட்டிற்குச் சென்று கைநிறைய சம்பாதிக்க வேண்டுமென்பதே! எனவே அந்த கனவு ஒருவருக்கு பூர்த்தி அடைய வேண்டுமென்றால் கிரக அமைப்புகள் எப்படி இருக்க வேண்டுமென்று பார்ப்போம்.  சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொண்டால் யார் யார் என்னென்ன படிப்பு படிக்க முடியும் என்று சொல்லிவிட முடியும்.
நான்காம் வீடு உயர்கல்வியைக் காட்டும் வீடாகும்.  செவ்வாய் நான்காம் வீட்டோடு தொடர்பு இருந்தால் என்ஜினியரிங் துறையில் நுழைய முடியும்.  இது பொதுவான விதியாகும்.  செவ்வாய், புதன் இரண்டிற்கும் தொடர்பு இருந்தால் இந்த படிப்பை படிக்க முடியும்.  சனியும், புதனும் இணைந்து சிறப்பாக இருந்தாலும் இன்ஜினியரிங் துறையில் பயில முடியும்.  எனவே கிரகங்களை சற்று நுட்பமாக ஆராய்ந்தால், இவர் பொறியியல் துறைக்கு நுழைவரா அல்லது மருத்துவத் துறைக்கு நுழைவாரா என்பதைக் கண்டுபிடித்து விட முடியும்.
செவ்வாய், புதன், சந்திரன் நான்காம் வீட்டோடு அல்லது பத்தாம் வீட்டோடு இணைந்தால் இன்ஜினியரிங் படிப்பு படிக்க முடியும்.
சனி ஜாதகத்தில் பலம் பெற்று, அதை சனி பார்த்தால் எலெக்ட்ரிக் துறையில் படிக்க முடியும். 
செவ்வாய், சுக்கிரன், சனி ஆகியோர் இணைந்து நான்காம் வீட்டோடு அல்லது பத்தாம் வீட்டோடு தொடர்பு கொண்டால் ஏர்கண்டிஷன் துறையில் படிக்க முடியும்.
சனி, புதன் இவர்களுடன் சந்திரன் பலம் பெற்று நின்றால் மெரின் என்ஜினியரிங்க் படிப்பு படிக்க முடியும்.
சனி, சூரியன் இவர்களுடன் சுக்கிரன் புதன் இணைந்து பலம் பெற்றால் கம்ப்யூட்டர் துறையில் படிக்க முடியும்.  கம்ப்யூட்டர் துறைக்கு சுக்கிரன் புதன் இணைவு அல்லது பார்வை இன்றியமையாதது.
அத்தனை கிரக அமைப்புகளும் உயர்கல்வி ஸ்தானமான நான்காம் இடத்திலோ அல்லது தொழில் ஸ்தானமான பத்தாமிடத்திலோ இருந்தால் இவர்கள் ஆசை நிறைவேறும்.
மருத்துவராக யார் படிப்பார்கள்:
இன்றைக்கு பலரது கனவு மருத்துவராக வர வேண்டும்.  MBBS படிக்க வேண்டும் என்பதே.  98 விழுக்காடு மதிப்பெண் பெற்றால்தான் டாக்டர் சீட்டே கிடைக்கிறது.  பணக்காரர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் 30 லட்சம் 50 லட்சம் கொடுத்து மருத்துவ கல்லூரியில் நுழைந்து விடுகிறார்கள்.  அப்படிப்பட்ட துறைக்கு ஒருவர் நுழைய வேண்டுமென்றால் எப்படிப்பட்ட கிரக அமைப்பு இருக்க வேண்டும். பத்தாம் வீட்டோடு அல்லது 4ம் வீட்டோடு சூரியன் பலம் பெற்று தொடர்பு கொள்ள வேண்டும்.  செவ்வாய் அறுவை சிகிச்சைக்குரிய கிரகம்.  எனவே செவ்வாயும் பலம் பெற்று பத்தாம் வீட்டோடு தொடர்பு கொள்ள வேண்டும்.  கேதுவும் பலம் பெற வேண்டும்.  கேது மட்டும் பலம் பெற்றவர்கள் சித்த வைத்தியர்களாகத் திகழ்கிறார்கள்.  ராகு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்றால் கூட மருத்துவ படிப்பைப் படிக்க முடியும்.
ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன், செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் புதன் பலம் பெற்றிருந்தாலும் 4ம் வீட்டு அதிபதி வலு பெற்றாலும் MBBS படிக்க முடியும்.  சூரியன் சந்திரனுடன் ராகு அல்லது கேது இணைந்திருந்தாலும் மருத்துவ படிப்பு படிக்க முடியும்.
சில நேரங்களில் கிரகங்கள் நேரடியாக தொடர்பு கொண்டிருக்காது.  மறைமுகமாக தொடர்பு கொண்டிருக்கும்.  எனவே சூட்சுமமாக கவனித்து முடிவு செய்ய வேண்டும். எப்படி கண்டு பிடிப்பது என்று பார்த்தால் சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம், ஆகிய நட்சத்திரங்களின் சாரத்தில் செவ்வாய் நின்றால் MBBS ஆக முடியும்.  அதே போல செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிடம் சித்திரை, அவிட்டம், ஆகிய நட்சத்திரங்களில் ஏதேனும் ஒரு நட்சத்திர சாரத்தில் சூரியன் நின்றாலும் MBBS படிக்க முடியும்.
சந்திரன் மனநிலையைக் குறிக்கக் கூடிய கிரகம்.  மேற்கண்ட கிரக அமைப்புகளோடு சந்திரன் தொடர்பு கொண்டால் மனநல மருத்துவராக வர முடியும்.  ஒரு சிலர் கண் மருத்துவராக வருவார்கள்.  சிலர் பல் மருத்துவராக வருவார்கள்.  சூரியன் 2ம் வீட்டோடு தொடர்பு கொண்டால் கண் மருத்துவராக வர முடியும்.  ராகு 2 ம் வீட்டோடு தொடர்பு கொண்டால் பல் மருத்துவராக வர முடியும்.
ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனும், செவ்வாயும் பலம் பெற்றால்தான் மருத்துவ படிப்பு படிக்க முடியும்.  வலு குன்றினால் மருத்துவத் துறையில் நுழைய முடியாது.  ஒரு சிலருக்கு ராகு பலம் பெற்று இருக்கும்.  இப்படிப்பட்டவர்கள் மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்று படிப்பார்கள்.  ஒரு சிலருக்கு மருத்துவ படிப்பிற்கு உதவும் கிரகங்கள் ஐந்தாம் வீட்டோடு தொடர்பு கொண்டிருக்கும்.  5ம் வீடு புத்திரஸ்தானம் எனவே இவர்கள் குழந்தை நல மருத்துவராக இருப்பார்கள் அல்லது பிரசவம் பார்க்கும் மருத்துவராக இருப்பார்கள்.  சூரியன் பலம் பெற்று, செவ்வாயும் பலம்பெற்றால்தான், அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவராக இருப்பார்கள்.
வழக்கறிஞராக யார் வருவார்கள்:
ஒரு சிலருக்கு வழக்கறிஞர் ஆக வர வேண்டுமென்ற ஆசை இருக்கும்.  ஆசை இருக்கும் எல்லோராலும் வக்கீல் படிப்பு படித்தாலும் வழக்கறிஞராக தொழில் செய்ய மாட்டார்கள். வழக்கறிஞர் படிப்பு படிக்க வேண்டிய கிரகங்கள் பலம் பெற்றிருக்கும்.   ஆனால் வாக்கு ஸ்தானம் பலம் பெற்றிருக்காது.  வாய் இருந்தால்தான் நீதிமன்றத்தில் சிறப்பாக வாதாட முடியும். பேச்சாற்றல் இல்லாதவர்களால் சிறந்த வழக்கறிஞராகப் பிரகாசிக்க முடியாது.  எனவே வாக்கு ஸ்தானாதிபதி பலம் பெற்றால்தான் ஒருவர் சிறந்த வழக்கறிஞராக தொழில் செய்ய முடியும்.  வாக்கு ஸ்தானாதிபதி ஆட்சி உச்சம் பெற்று குரு பார்த்தால் அவர் திறமையாக வாதிடுவார்.
எனவே ஒரு வழக்கறிஞர் சிறப்பாக பணியாற்ற அவருடைய ஜாதகத்தில் சில அமைப்புகள் நன்றாக அமைய வேண்டும்.
இரண்டாம் வீடு பலம் பெற வேண்டும். இதற்கு அடுத்து ஐந்தாம் வீடும் பலம்பெற வேண்டும்.  காரணம் பல விஷயங்களை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  அவ்வாறு ஒருவருக்கு நினைவாற்றல் இருக்க வேண்டுமென்றால் புத்தி ஸ்தானமாகிய ஐந்தாம் வீடும் பலம் பெற்றிருக்க வேண்டும். அடுத்த எதிரிகளை வெல்ல வேண்டுமென்றால் ஆறாம் வீடு நன்றாக இருக்க வேண்டும்.  அப்பொழுது தான் எதிரிகளை எதிர்த்து வழக்காடி வெற்றி பெற முடியும்.  ஒருவருடைய மனோ நிலை நன்றாக இருக்க வேண்டும்.  எனவே மனோகாரனாகிய சந்திரன் பலம் பெற வேண்டும்.  அதற்கு அடுத்து வழக்கறிஞர் துறையில் கடுமையாக உழைக்க சனி பலம் பெற்றிருக்க வேண்டும்.  ஆக இத்தனை அம்சங்கள் சிறப்பாக இருந்தால்தான் ஒருவர் வழக்கறிஞர் துறையில் சிறப்பாகப் பிரகாசிக்க முடியும்.
வழக்கறிஞராக சிறப்பாக வர வேண்டுமென்றால் குரு பலமாக இருக்க வேண்டும்.
குரு சட்ட அறிவைத் தருவதில் வல்லவர்
செவ்வாய் தர்க்க அறிவைத் தருவதில் வல்லவர்
புதன் பேச்சாற்றல் வளர்ப்பவர்
ஆக குரு, செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்கள் பலம் பெற்று இருந்தால் சிறந்த வழக்கறிஞராக வர முடியும்.  சிறந்த வழக்கறிஞர்கள் பலருக்கு இரண்டாம் வீட்டில் குருபலம் பெற்றிருக்கும்.
ஆடிட்டராக எந்த அமைப்பு இருக்க வேண்டும்?
சி.ஏ படித்தால்தான் ஒருவர் ஆடிட்டராக வர முடியும்.  அக்கவுண்டன்ஸியில் தேர்ச்சி பெற்றால்தான் ஆடிட்டராக வரமுடியும்.  எனவே முதலில் B.Com படிக்க வேண்டும்.  அதற்கு பிறகு C.A படிக்க வேண்டும்.  இதற்கு எப்படிப்பட்ட கிரக அமைப்பு இருக்க வேண்டுமென்று பார்ப்போம்.
கணிதம், அக்கவுண்டன்சி ஒருவருக்கு நன்றாக வர வேண்டுமென்றால் ஜாதகத்தில் புதன் பலமாக இருக்கவேண்டும்.  புத பலம் குறைந்தவர்கள் கண்டிப்பாக படிக்க முடியாது.  படிப்பு ஏறாது.  எனவே இதனை மனத்தில் கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும்.  அடுத்து ஒருவர் C.A படிக்க வேண்டுமென்றால் புத்தி கூர்மையாக இருக்க வேண்டும்.  புத்தி மழுங்கியிருந்தால் படிப்பு ஏறாது.  எனவே புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீடு பலமாக இருக்க வேண்டும்.  அந்த ஸ்தானத்திற்குரிய கிரகமும் பலம் பெற்றிருக்க வேண்டும்.  மேலும் விருதுகள் பெறக் கூடிய 9ம் வீடு பலம் பெற வேண்டும்.  9ம் வீட்டிற்குரிய கிரகமும் பலம் பெற வேண்டும்.  இத்தனை அம்சங்களையும் தாங்கி ஒருவர் நிற்க வேண்டுமென்றால் அவரது லக்னமும் பலம் பெற வேண்டும்.  எனவே 1,5,9 ஆகிய வீடுகளும் அந்த வீட்டு அதிபர்களும் பலம் பெற வேண்டும்.  புதனும் பலம் பெற வேண்டும்.  ஆக இத்தனை அமைப்புகள் சரியாக இருந்தால் ஒருவரால் ஆடிட்டராக பரிமளிக்க வேண்டும்.
ஒரு சிலர் IAS, IPS போன்ற படிப்புகளைப் படிப்பார்கள்.  கலெக்டராக, காவல்துறை அதிகாரிகளாக இருப்பார்கள்.  இதற்கு மேற்கண்ட அமைப்பை ஒருவர் பெற வேண்டுமென்றால் கடுமையாக உழைக்கத் தயாராக இருக்கவேண்டும்.  சில கிரக அமைப்புகளும் அவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும்.
ஒருவர் கலெக்டர் ஆக வரவேண்டுமென்றால் அல்லது IAS படித்து உயர் அதிகாரியாக வர வேண்டுமென்றால் அவருடைய லக்னாதிபதி பலம் பெற்றிருக்க வேண்டும்.  லக்கினம் கெட்டு, லக்னாதிபதி நீசம் பெற்றால் IAS ஆக வர முடியாது.  IAS மற்றும் IPS ஆக இருக்கும் அதிகாரிகள் கம்பீரமாக இருப்பார்கள்.  இந்த கம்பீரம் இவர்களுக்கு வரவேண்டுமென்றால் லக்னாதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெற வேண்டும்.
அடுத்து தைரியத்தைக் கொடுக்க கூடிய செவ்வாய் பலம் பெற வேண்டும்.  செவ்வாய் அரசு அதிகாரியாக ஆக்கும் கிரகம்.  ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெறவில்லை யென்றால் அரசாங்கத்தில் வேலை பார்க்க முடியாது.  எனவே அரசு துறையில் உயர் பதவியில் ஒருவர் வர வேண்டுமென்றால் செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் வலுபெற்று இருக்க வேண்டும்.  செவ்வாய் 3,6,10,11 ஆகிய இடங்களில் ஏதேனும் ஓர் இடத்தில் வலுபெற்றுநின்று குருவின் பார்வையைப் பெற வேண்டும்.  விருது, பட்டம் பாராட்டு ஒருவருக்கு வாங்கிக் கொடுக்கும் ஒன்பதாம் இடத்திற்குரிய கிரகம் கெடாமல் இருக்க வேண்டும்.  சுபகிரகங்களின் பார்வையைப் பெற வேண்டும்.  சூரியன், சந்திரன் ஆகிய கிரகங்களில் ஏதேனும் ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெற்று குருவின் பார்வையைப் பெற்று பத்தாம் வீட்டோடு தொடர்பு வைத்திருக்க வேண்டும்.  இப்படி அமைப்பை பெற்றவர்களால் மட்டுமே IAS படித்து வெற்றி பெற முடியும்.
போலீஸ் ஆபிஸராக ஒருவர் பிரகாசிக்க வேண்டுமென்றால் கஜகேசரி யோகம் ஜாதகத்தில் சிறப்பாக அமைய வேண்டும்.  அடுத்து சூரியன் செவ்வாய் பலம் பெற வேண்டும்.  லக்னாதிபதி தொழில் ஸ்தானாதிபதி, சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் பலம் பெற்றிருக்க வேண்டும்.  ஆட்சி உச்சம் பெற்றிருப்பது சிறப்பு.
செவ்வாய் விருச்சகம், மேஷம் ஆகிய வீடுகளில் ஆட்சியாக இருக்கலாம்.  அல்லது மகரத்தில் உச்சமாக இருக்கலாம்.  அப்படி அமையக் கூடிய இடம் லக்னத்திலிருந்து 3,4,6,9,10,11 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு இடமாக இருக்க வேண்டும்.  சூரியன் சிம்மத்தில் ஆட்சியாக, அல்லது மேஷத்தில் உச்சமாக இருக்கலாம். மேலும் அந்த இடம் லக்னத்திற்கு 3,4,6,10,11 ஆகிய இடங்களில் ஏதேனும் ஓர் இடமாக இருக்க வேண்டும்.
குரு, செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களில் ஒரு கிரகம் ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ அமைய வேண்டும்.  விருச்சகத்தில் ஆட்சி பெற்ற செவ்வாயை குரு கடகத்தில் உச்சம் பெற்று 5ம் பார்வையாக பார்க்கும்படி அமைப்பு இருக்க வேண்டும். அல்லது மேஷத்தில் ஆட்சி பெற்ற செவ்வாயை தனுசில் உள்ள குரு 5ம் பார்வையாக பார்க்கும்படி அமைப்பு இருக்க வேண்டும்.  இப்படிப்பட்ட அமைப்பு அனைத்தும் இருக்கும் என்று எண்ண வேண்டாம்.  இதில் ஏதேனும் ஒரு சில அமைப்பு இருந்தால் கூட IPS படிப்பு படிக்க முடியும்.
       சூரியனும் புதனும் ஒன்றாக இணைந்து நல்ல இடத்தில் இருந்தால் இம்மாதிரியான பட்டப்படிப்பை மட்டும் படிப்பார்கள்.
 நான்காம் வீட்டில் சுபகிரகங்கள் அமரலாம்.  நல்லது நடக்கும், தீய கிரகங்கள் அமரக் கூடாது.  அமர்ந்தால் அந்த பாவம் பாதிக்கக்கூடும்.  நான்காம் வீட்டில் சுப்கிரகங்கள் கேந்திர ஸ்தானங்களுக்கு அதிபராய் அமரக் கூடாது.  அமர்ந்தால் கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படும்.  எனவே சுபகிரகங்கள் மட்டும் 1,4,7,10 ஆகிய வீடுகளுக்கு அதிபராக ஆகாமல் இங்கு அமர வேண்டும்.  இப்பொழுது ஒவ்வொரு கிரகங்களைப் பற்றி பார்ப்போம்.
சூரியன்
நான்காம் வீட்டில் சூரியன் பலம் பெற்று அமர்ந்தால் வளமான வாழ்க்கை அமையும்.  உயர்ந்த பதவி, நல்ல அரசு உத்தியோகம், வீடு வாகனம் என அனைத்தையும் நிறைவாகப் பெற்று திருப்திகரமாகவே ஜாதகர்கள் வாழ்வார்கள்.  பகை அல்லது நீசம் பெற்று சூரியன் அமர்ந்தால் இவ்வாறு அமைவதற்கு தடை எற்படும்.
சந்திரன்
நான்காம் பாவம் மாத்ரு ஸ்தானம் என்று சொல்வார்கள் அதாவது தாயைக் குறிக்கக்கூடிய இடமாகும்.  இந்த இடத்தில் தாய்க்கு காரகத்துவமான சந்திரன் அமர்ந்தால் அம்மாவின் ஸ்தானம் பாதிக்கப்படும். அதாவது இப்படிபட்ட அமைப்பை உடைய ஜாதகரின் தாய்க்கு தோஷம் உண்டாகும்.  உடல் நலம் அவ்வப்பொழுது பாதிக்கப்படும்.  ஏதேனும் ஒரு பிணி, பிரச்சனை இவர்களது மாதாவுக்கு எற்பட்டுக் கொண்டே இருக்கும்.  இந்த ஒரு விஷயத்தில் மட்டும பாதிப்பு உண்டுஅதே நேரத்தில் முழுமையான கல்வி ஜாதகர்களுக்கு அமையும்சுப கிரகம் அமர்ந்திருப்பதால் வீடு வாசல் சிறப்பாக அமையும்பெரிய பங்களா போன்ற அமைப்பு ஏற்படும்புகழ் உண்டு விருதுகள் பெறுவார்கள்நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள்சுக ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதால் சுகமான வாழ்க்கை அமையும்குடியிருக்கும் வீடும் குளுமையாக இருக்கும்.
செவ்வாய்
தீய கிரகமான செவ்வாய் இங்கு அமர்வதால் இந்த பாவத்திற்கு சொல்லப்பட்ட காரகத்துவங்கள் பாதிக்கப்படும் பெற்றத் தாயுடன் அடிக்கடி சண்டை போடுவார்கள். செவ்வாய் போர் கிரகம்.  இரத்தத்திற்கு சம்மந்தப்பட்ட கிரகம். எனவே செவ்வாய் தாய் ஸ்தானத்தில் இருந்தால், எப்பொழுதும் தாயுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருப்பார்கள்.  உடல் ஆரோக்யமாக இருக்காது.  அவ்வப்பொழுது ஏதாவது ஒரு நோயினால் பாதிக்கப்படுவார்கள்.  சுகமாக இருக்க முடியாது.  உள்ளொன்று வைத்து புறமொன்று பேசித் திரிவார்கள்.  வாகனங்கள் அமையும்.  ஆனால் நிறைய விரயம் ஆகும்.  பிற்காலத்தில் இவர்களது சொத்து விரயமாகிவிடும்.  மன அமைதியின்றி திரிவார்கள்.  உயர்கல்வியில் தடை ஏற்படும்.  காரணம் படிக்க வேண்டிய வயதில்,  செவ்வாய், நான்கில் இருப்பதால்,ஊர்சுற்றிக் கொண்டிருப்பார்கள். இதனால் கல்வியில் தடை ஏற்படும். அதே நேரத்தில் செவ்வாய்க்கு நான்காம் வீடு சொந்தமாக இருந்து, லக்னாதிபதிக்கு நட்பாக இருந்தால்,  நன்மையான பலன்கள் நடக்கும்.  எனவே பல கோணங்களில் ஆற அமர ஆராய்ந்து முடிவு செய்யவேண்டும்.
புதன்
சுபகிரகம், நான்காம் வீட்டில் அமரலாம்.  நல்ல பலன்களே நடக்கும்.  புதன் கல்விக் காரனாகையால் இலக்கியத்தில் பாண்டித்துவம் பெறுவார்கள்.  கதை, கவிதைகள், எழுதுவார்கள்.  சொந்த வீடு வாகனம் அமையும். வீடு வேலைப்பாடுடன் காணப்படும்.  பழைய வீடாக இருந்தால் கூட கலைநுணுக்கத்துடன் அழகாகக் காணப்படும்.  ஒரு சிலர் புதிய வீடு கட்டி குடி போய் இருப்பார்கள்.  பார்ப்பதற்கு நன்றாக இருக்காது.  எனவே பழைய வீடாக இருந்தால் கூட கலை நயத்துடன் அழகாக பெரிய வீடு அவர்களுக்கு இருந்தால், புதன் அவர்களது ஜாதகத்தில் வீட்டைக் குறிக்கக் கூடிய 4ம் இடத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இப்படிப்பட்ட அமைப்பையுடையவர்கள் புதிது புதிதாக வாகனங்களை வாங்கி, பழைய வாகனங்களை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள்.  இவர்களுக்கு உற்றார் உறவினர் ஆதரவு என்றைக்கும் உண்டு.  அறிவாளிகளாக விளங்குவார்கள்.
குரு
குரு லக்னத்திற்கு 4ம் வீட்டில் இருந்தால் படிப்பு நன்றாக வரும்.  நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.  இவர்களுக்கு என்றைக்குமே பணப்பிரச்சனை ஏற்பட்டாலும்  உறவினர்களாலும், நண்பர்களும் தக்க சமயத்தில் உதவி கிடைக்கப் பெற்று தங்களது பிரச்சனைகளைப் போக்கிக் கொள்வார்கள்.  நான்காம் வீட்டில் குரு இருப்பவர்களுக்கு தண்ணீர் பஞ்சம் வராது.  கிணறு தோண்டினாலும் போர்வெல் எடுத்தாலும் தண்ணீருக்குப் பஞ்சமிருக்காது.  இவர்கள் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பார்கள்.  எதிரிகளையும் நண்பர்களாக மாற்றிக் கொள்வது இவர்களது தனிச்சிறப்பாகும்.
சுக்கிரன்
சுபகிரகமான சுக்கிரன் நான்கில் இருந்தால் சுக்கிரனுக்குரிய காரகத்துவம் அப்படியே நடக்கும்.  இல்லறத்தை குறிக்கக்கூடிய கிரகமாதலால் சுகஸ்தானமான 4ம் இடத்தில் சுக்கிரன் இருக்கும் பொழுது வசதியான மனைவி கணவனுக்குக் கிடைக்கும். பெண்ணாக இருந்தால்,வசதியான கணவன் கிடைப்பான்.  நிறைய வாகனங்கள் வைத்திருப்பார்கள்.  ஒரு சிலர் டிராவல்ஸ் தொழில் நடத்துவார்கள்.  இவர்கள் கலைத்துறைக்குச் சென்றாலும் சரி, இசைத்துறைக்குச் சென்றாலும், சரி, நாட்டியத்துறைக்குச் சென்றாலும் சரி அதில் இவர்கள் வெகு வேகமாக முன்னுக்கு வந்துவிடுவார்கள்.  உலக நாயகன் கமல் அவர்கள் ஜாதகத்தில் 4ம் வீட்டில் சுக்கிரன் இருப்பது குறிப்பிடத்தக்கது.  பேரும் புகழும் இவர்களைத் தேடிவரும்.  ஒரு சிலர் வைர வியாபாரிகளாகத் திகழ்வார்கள். 
சனி
சனி தீய கிரகம். சுகஸ்தானம் என்ற இந்த ஸ்தானத்தில் சனி இருந்தால் சுகம் பாதிக்கப்படும். முதலில் தாயாரை எடுத்துக் கொள்வோம்.  தாயாருக்குரிய இடம் 4 மிடம்.  எனவே இங்கு சனி இருந்தால் தாயாரின் உடல் நிலை பாதிக்கப்படும்.  ஏதேனும் ஒன்று அவர்களைப் படுத்திக் கொண்டிருக்கும்.  உடல் அவ்வளவு ஆரோக்யமாக இருக்காது.  தாயாருக்கும், மகனுக்கும் அக்கடி  கருத்துவேறுபாடு வரும்.  இதை அடுத்து இந்த இடம் வீட்டைக்குறிக்கக்கூடிய இடம். எனவே இங்கு சனி இருந்தால் வீடு வாங்குவதிலோ அல்லது கட்டுவதிலோ பிரச்சனை ஏற்படும்.  வீடு அவ்வளவு திருப்தியாக இருக்காது.  ஏதேனும் ஒரு குறை இருக்கும்.  தாய் வழி சொத்தில் வில்லங்கம் இருக்கும்.  வாகன யோகம் திருப்திகரமாக இருக்காது.  அடிக்கடி வாகனத்தில் ஏதேனும் ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கும்.  சனி 4ல் இருப்பவர்களுக்கு நாய்களைக் கண்டால் பிடிக்காது. ஏதேனும் ஒரு பயம் இருக்கும்.  உறவினர்களிடத்தில் விரோதம் வளரும்.  சிக்கனமாக இருக்கவே விரும்புவார்கள்.  எனவே மற்றவர்கள் இவர்களை கஞ்சன் என்றே அழைப்பார்கள்.  வீட்டை அவர்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள மாட்டார்கள்.  குரு சனியைப் பார்த்தாலும் அல்லது இந்த வீட்டில் சனி ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ இருந்தால் இந்தளவிற்கு பாதிப்பு இருக்காது.
ராகு
தாயாரின் நிலை பாதிக்கும்.  தாய்க்கு தோஷம் என்று கூட சொல்லலாம். தாயாருக்கும் மகனுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு வரும்.  உறவினர்களின் உதவி கிடையாது.  இவர்களது முயற்சியில் தாமதமான பலனே ஏற்படும்.  சொந்தமான வீடு கட்டுவதில் பிரச்சனை ஏற்படும்.  பெரிய வீட்டில் பிறந்தாலும், காலப்போக்கில் சிறிய வீட்டிற்கு வந்து விடுவார்கள்.  கல்வியில் பிரச்சனை ஏற்படும்.
கேது
படிப்பில் மந்தமான போக்கு நிலவும், சொந்தமான வீடு வாங்கும் யோகம் இல்லை.  அப்படியே வீடு வாங்கினால், மனத்திற்குப் பிடித்த வகையில் வீடு இருக்காது.  ஏதோ ஓர் அதிருப்தி இருக்கும்.  வாகன யோகம் குறைவு.  அடிக்கடி வாகனத்தால் பிரச்சனை வரும்.  தாயின் உடல் நிலை பாதிக்கும்.  சுகம் கெடும் இல்லற வாழ்க்கையை விட ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபாடு வரும்.
இந்த பலன் எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும் பொருந்தும். எனவே ஒவ்வொரு லக்னத்தில் பிறந்தவர்களுக்குத் தனித்தனியாக பலன் சொல்லவேண்டியதில்லை.  .  .  குரு மேற்கண்ட கிரகங்களைப் பார்த்தால் கெட்ட பலன்கள் நடக்காது.  அதே போல அந்த கிரகங்கள் ஆட்சியாக இருந்தாலும், உச்சமாக இருந்தாலும் தீய பலன்கள் நடக்காது.  எனவே இவற்றையெல்லாம் கவனித்து நாம் பலன்களை முடிவு செய்ய வேண்டும்.

2 comments:

  1. உபயோகம் இல்லாத பதிவு! இதை எவ்வாறு படிப்பது? யாரும் படிக்க இயலாத பதிவு ஏன்?

    ReplyDelete
  2. View Weber version click செய்து பார்க்கவும் தெளிவாக தெரியும்

    ReplyDelete